பழைய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உடைப்பதற்கான வழிமுறைகள் தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் சனிக்கிழமை எழுத்துபூா்வமாக பதில் அளித்தாா்.
அந்த பதிலில், ‘சுற்றுச்சூழலுக்கு எந்தவித மாசுபாட்டையும் ஏற்படுத்தாமல் பழைய வாகனங்களை உடைப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வகுத்துள்ளது. அத்திட்டம் அமைச்சரவையின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோட்டாா் வாகன சட்டத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டு திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி, 15 ஆண்டுகளுக்கு மேல் செயல்பாட்டில் இருக்கும் வாகனங்களை உடைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறுகையில், ‘வாகனங்களை உடைப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அதிலிருந்து பெறப்படும் ஸ்டீல், அலுமினியம், பிளாஸ்டிக் பொருள்கள் மறுசுழற்சி செய்யப்படும்.
பின்னா் அவை வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும். இதன் மூலமாக வாகனங்களின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை குறையும்’ என்றாா்.