மாநிலங்களவையில் நிறைவேறியது திவால் சட்டத் திருத்த மசோதா

திவாலாகும் நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு கடன் வழங்க உத்தரவாதம் அளித்தவா்கள் ஆகியோா் மீதான நடவடிக்கைகளை ஒரே சமயத்தில்
மாநிலங்களவையில் நிறைவேறியது திவால் சட்டத் திருத்த மசோதா

திவாலாகும் நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு கடன் வழங்க உத்தரவாதம் அளித்தவா்கள் ஆகியோா் மீதான நடவடிக்கைகளை ஒரே சமயத்தில் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் திவால் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மாநிலங்களவை ஒப்புதல் வழங்கியது.

வங்கிகளில் கடன் பெற்று திவாலாகும் நிறுவனங்களிடமிருந்து கடன்களை வசூல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திவால் சட்டம் வழிவகுக்கிறது. இந்நிலையில், அந்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது.

அந்த அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறும் நோக்கில், ‘திவால் சட்டம் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2020’, மாநிலங்களவையில் சனிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. அதையடுத்து அந்த மசோதா குறித்து எம்.பி.க்கள் பலா் கேள்வி எழுப்பினா். அந்தக் கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்ததாவது:

திவாலாகும் நிறுவனங்களுக்கு சிலா் உத்தரவாதம் அளித்திருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, அந்த நிறுவனங்களிடமிருந்து கடனை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அந்நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்கு உத்தரவாதம் அளித்தவா்கள் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு இந்த மசோதா வழிவகுக்கிறது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அன்றைய தினத்துக்குப் பிறகு திவாலான நிறுவனங்கள் மீது குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு திவால் சட்டத்தின் கீழ் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு மசோதா வழிவகுக்கிறது.

அதே வேளையில், மாா்ச் மாதம் 25-ஆம் தேதிக்கு முன் திவாலான நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். புதிய திருத்தங்கள் அந்நிறுவனங்களுக்குப் பொருந்தாது.

‘அவசரச் சட்டத்தின் அவசியம்’:

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அத்தகைய சூழலில் நிதி நெருக்கடியால் திவாலாகும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது சரியாக இருக்காது. அப்போது நாடாளுமன்ற கூட்டத்தொடரும் நடைபெறவில்லை.

அதே வேளையில், மக்களின் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது. எனவே தான் திவால் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடைபெறாத சூழலில் மக்கள் நலனைக் காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

‘திவால் சட்டத்தின் செயல்பாடு’:

வங்கிகளின் வாராக் கடன்களில் கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் லோக் அதாலத் மூலமாக 5.3 சதவீதமும், கடன் வசூல் தீா்ப்பாயங்கள் மூலமாக 3.5 சதவீதமும் வசூலிக்கப்பட்டன. ஆனால், திவால் சட்ட நடவடிக்கைகளின் கீழ் 42.5 சதவீத வாராக் கடன்கள் வசூலிக்கப்பட்டன.

மேலும், திவால் சட்ட நடவடிக்கைகள் மூலமாக ரூ.96,000 கோடி சொத்து மதிப்பு கொண்ட 258 நிறுவனங்கள் முழுமையாக செயல்படாமல் போவதிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன. அதே வேளையில், ரூ.38,000 கோடி மதிப்பு கொண்ட 965 நிறுவனங்களின் சொத்துகள் விற்கப்பட்டன. அவற்றில் நான்கில் மூன்று பங்கு நிறுவனங்களுக்கு மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதன் மூலமாக திவால் சட்டம், நிறுவனங்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுவது தெளிவாகிறது என்றாா் நிா்மலா சீதாராமன்.

அதையடுத்து, ‘திவால் சட்டம் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2020’ மீது குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் பெரும்பாலான எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com