தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை உள்பட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
வடமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லோசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்
அவலாஞ்சி 18 செ.மீ மழையும், பவானி 12 செ.மீ மழையும், வால்பாறை, தேவலா தலா 11 செ.மீ மழையும், சின்னக்கல்லார் 10 செ.மீ மழையும், சின்கோனா, சோலையார் தலா 9 செ.மீ மழையும், பெரியாறு, பந்தலூர் தலா 6 செ.மீ மழையும், வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் தலா 5 செ.மீ மழையும் சிவலோகம், தேக்கடி தலா 4 செ.மீ மழையும், பாபநாசம் 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.