ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கரோனாவுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி நடத்தப்படும் 3-ம் கட்ட பரிசோதனை புணேவில் தொடங்கியுள்ளது.
இதுபற்றி சசூன் பொது மருத்துவமனை டீன் முரளீதர் தாம்பே தெரிவிக்கையில், "கோவிஷீல்ட் தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையை நாங்கள் தொடங்கியுள்ளோம். 150 முதல் 200 தன்னார்வலர்களுக்கு செலுத்தவுள்ளோம்" என்றார்.
2-ம் கட்ட பரிசோதனை பாரதி வித்யாபீத் மருத்துவக் கல்லூரியிலும், கேஇஎம் மருத்துவமனையிலும் நடத்தப்பட்டது.
முன்னதாக:
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்காக உள்நாட்டு நிறுவனமான சீரம் இந்தியா (எஸ்ஐஐ), பிரிட்டன்-ஸ்வீடன் நிறுவனமான அஸ்த்ரா ஜெனிகாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சோதனையின்போது, தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அஸ்த்ரா ஜெனிகா நிறுவனம் பல்வேறு நாடுகளில் நடத்திவந்த சோதனை நடவடிக்கைகளை நிறுத்தியது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் 2 மற்றும் 3-ஆம் கட்ட சோதனை நடவடிக்கையை நிறுத்துமாறு சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் (டிஜிசிஐ) கடந்த 11-ஆம் தேதி அறிவுறுத்தியது. எனினும், கடந்த 15-ஆம் தேதி முதல் மீண்டும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.