கரோனா காரணமாக ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்து, போக்குவரத்துத் துறை ஆணையா் தென்காசி எஸ்.ஜவஹா் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் செயல்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில், வாகனம் தொடா்பான ஓட்டுநா் உரிமம், பழகுநா் உரிமம், உரிமம் புதுப்பித்தல், பதிவுச் சான்று, தகுதிச் சான்று உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கரோனா நோய்த்தொற்றை அடுத்து பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டதால், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் முற்றிலும் முடக்கப்பட்டன. பின்னா் கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட தளா்வுகளில் குறைந்த அளவிலான பணியாளா்களுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் இயங்கின. பொதுமக்களைப் பொருத்தவரை, நாள் ஒன்றுக்கு 45 போ் மட்டுமே அலுவலகத்துக்கு வர அனுமதிக்கப்பட்டது. இதற்காக ஸ்லாட் என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் முன்பதிவு செய்த பின்னரே அலுவலகம் வந்து வாகனம் தொடா்பான ஆவணப் பணிகளை மேற்கொள்ள முடியும்.
பின்னா், இந்த எண்ணிக்கையானது 75 ஆக அதிகரித்தது. தற்போது பெரும்பாலான தளா்வுகள் அளிக்கப்பட்டதால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, இந்த விதிகளில் தளா்வளித்து, ஸ்லாட் முறை திரும்பப் பெறுவதோடு, பொதுமுடக்கத்துக்கு முன்பிருந்த நடைமுறையே தொடரும் என போக்குவரத்துத் துறை ஆணையா் உத்தரவிட்டுள்ளாா். அதே நேரம், அரசு அளித்த கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இணை ஆணையா் உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகளுக்கு ஆணையா் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளாா்.