ராஞ்சி: சூனியக்காரி என்ற சந்தேகத்தின் பேரில் ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் ஒருவர் மொட்டையடித்து நிர்வாண ஊர்வலம் அழைத்து வரப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டம் கொம்பாகேரா கிராமத்தில் சனிக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. குறிப்பிட்ட அந்தப் பெண் மாய மந்திரங்கள் செய்யும் சூனியக்காரி என்ற சந்தேகத்தின் பேரில் ஊர் பஞ்சாயத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் மீது மந்திரப் பயிற்சியின் மூலம் கிராமவாசி ஒருவர் மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே அதற்குத் தண்டனையாக அவருக்கு மொட்டையடித்து நிர்வாணமாக ஊர்வலம் வரச் செய்யப்பட்டுள்ளார். அத்துடன அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட கொடுமையும் நடந்துள்ளது.
இதையடுத்து மறுநாள் அந்தப் பெண் அளித்த புகாரினைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, ஆறு பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாயிரமாவது ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து இன்று வரை ஏறக்குறைய 1200 பேர் சூனியம் செய்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும், அதில் அநேகம் பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.