புது தில்லி: வேளாண் மசோதா விவாதத்தின் போது எம்.பி.க்கள் தன்னை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதைக் கண்டித்து மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உண்ணாவிரதம் தொடங்கினார்.
முன்னதாக, மாநிலங்களவையில் தன்னை அவமதிக்கும் வகையில் எம்.பி.க்கள் நடந்து கொண்டதைக் கண்டித்து ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு இது குறித்து ஹரிவன்ஷ் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், செப்டம்பர் 20-ம் தேதி மாநிலங்களவையில் நடந்த விஷயத்தால், கடந்த இரண்டு நாள்களாக மனவலியுடன் மன அழுத்தத்துடன் இருக்கிறேன். இரவில் உறங்க முடியவில்லை. ஜனநயாகம் என்ற பெயரில், மரியாதைக்குரிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர், அவர்களது நடவடிக்கைக்கு எதிராக நான் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போகிறேன். அதன் மூலம் அவர்கள் மனந்திருந்த வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, மாநிலங்களவையில் இரு வேளாண் மசோதாக்கள் மீது ஞாயிற்றுக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, திரிணமூல் காங்கிரஸ், திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷின் இருக்கையை முற்றுகையிட்டு கூச்சல் குழப்பம் விளைவித்தனா். ஹரிவன்ஷ் மீது விதிமுறைகள் புத்தகத்தை கிழித்து வீச முற்பட்டது, அவையில் காகிதங்களை கிழித்து எறிந்தது, அவரது ஒலிபெருக்கியை பிடுங்க முயற்சித்தது ஆகிய சம்பவங்களால் வெகுநேரம் அமளி நீடித்தது.
இதையடுத்து அவையில் மோசமாக நடந்து கொண்ட எட்டு எம்பிக்களை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை கண்டித்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.