மும்பையில் தொடர் கனமழை பெய்து வருவதால் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகரில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 24 மணிநேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் பரவலாக 240 மி.மீ மழை பெய்துள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழித்தடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் உள்ளூர் ரயில்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மும்பை மாநகரில் அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அவசர மற்றும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மும்பை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இன்று விசாரணைக்கு வர இருந்த வழக்குகள் நாளை விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.