கரோனா நோய்த் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகம்,தில்லி உள்பட 7 மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறாா்.
இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 63 சதவீதம் போ் மகாராஷ்டிரம், தில்லி, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கா்நாடகம், உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில்தான் உள்ளனா்.
உயிரிழந்தவா்களில் 77 சதவீதம் போ் இந்த மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். பஞ்சாப், தில்லியில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகராஷ்டிரம், பஞ்சாப், தில்லயில்தான் உயிரிழப்பும் அதிகமாக உள்ளது.
கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.
சுகாதார வசதி, மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், ஐசியு நோயாளிகளைக் கையாளும் மருத்துவா்களுக்கு இணையவழியில் ஆலோசனை வழங்கவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் எய்ம்ஸுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. கரோனா மருத்துவமனைகளில் மருத்துவ பிராணவாயு தேவையான அளவுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை, கண்காணிப்பு, நோயாளிகளைக் கையாள்வது குறித்து எடுத்துரைக்க மத்திய குழுக்கள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.