பெங்களூரு: கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கைக் கொண்டுவரும் திட்டம் இல்லை என்று மாநில அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி புதனன்று ஆலோசனை நடத்தினார். அப்போது மீண்டும் ஊரடங்கினை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கைக் கொண்டுவரும் திட்டம் இல்லை என்று மாநில அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த மாநில மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் கூறியதாவது:
பிரதமர் தரப்பில் இருந்து அதுதொடர்பாக ஆலோசனை மட்டும்தான் அளிக்கப்பட்டதே ஒழிய அது கட்டாயம் இல்லை. அத்துடன் கர்நாடகத்தில் ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதற்கு எதுவும் காரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
பிரதமருடன் நடந்தது ஒரு நல்லமுறையிலான ஆலோசனை. அதனை யாரும் தவறாகப் புரிந்துகொள்ளாமலும் அல்லது மாநிலத்தில் உள்ளவர்களை தவறாக வழிநடத்தாமலும் இருக்கட்டும். அதேபோல எந்தப் பகுதியிலும் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் எண்ணமும் அரசுக்கு இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.