பொதுநிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணியமாட்டேன் எனக் கூறிய மத்தியப்பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அதற்காக மன்னிப்புக் கோரினார்.
கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மத்தியப்பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மாநில பா.ஜ.க. உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, எந்த நிகழ்ச்சியிலும் முகக்கவசம் அணிய மாட்டேன் எனக் கூறினார்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே இது குறித்து பேசிய அமைச்சர் மிஸ்ரா, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அதிக நேரம் முகக்கவசம் அணிய முடியவில்லை எனக் கூறினார்.
''என்னுடையே பேச்சு மிகவும் தவறானது. பிரதமர் மோடியின் செயலுக்கு எதிராக இருப்பதால் அதனை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். என் வார்த்தைகள் என்னை கடுமையாக காயப்படுத்தியுள்ளது. கரோனாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், எந்த நிகழ்ச்சியிலும் முகக்கவசம் அணியமாட்டேன் எனக் கூறியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய கருத்து சட்டத்திற்கு எதிரானது. அதனால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.