எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், குணமடைந்து வருகிறேன் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நான் விரைவில் நலன் பெற வேண்டி நாட்டு மக்களிடமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும், பல்வேறு துறை தலைவர்களிடமிருந்தும் வந்த தகவல்களைப் பார்த்து தான் உணர்ச்சிவயப்பட்டதாகவும் அதில் கூறியுள்ளார்.
உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவா்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லுமாறு ராணுவ மருத்துவமனை பரிந்துரைத்ததையடுத்து, எய்ம்ஸ் மருத்துமவனைக்கு கடந்த சனிக்கிழமை மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அவருக்கு செவ்வாய்க்கிழமை இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இது தொடா்பாக, குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு செவ்வாய்க்கிழமை காலை இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவா்கள் குழு அவரைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறது’ என்று குறிப்பிட்டிருந்தது.