ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் மற்றும் பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ககாபோரா பகுதியில் உள்ள தோபி மொஹல்லாவில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் அடையாளர் தெரியாத தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், புல்வாமாவின் சம்பூராவில் வசிக்கும் இஷ்ரத் ஜான் (25), குலாம் நபி தார் (42) ஆகியோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், இங்குள்ள எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல் அதிகாரி கூறியுள்ளார். தற்போது அவர்களின் நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.