புது தில்லி: நாடு முழுவதும் ஒரே நாளில் 89,129 பேருக்கு கரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளது, இதில் தமிழகம் உள்பட வெறும் 8 மாநிலங்களைச் சேர்ந்த 72 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மகாராஷ்டிரம், கர்நாடகம், சட்டீஸ்கர், தில்லி, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்த 72 ஆயிரம் பேர், அதாவது மொத்த பாதிப்பில் 81.42 சதவீதம் பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் 89 ஆயிரம் பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாகும்.
இதையும் படிக்கலாமே.. எந்தெந்தக் கட்சி எந்தெந்த சின்னத்தில் போட்டி?
இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சனிக்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடைந்த, 24 மணி நேரத்தில் 89,129 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,23,92,260-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 714 போ் உயிரிழந்தனா்.
நாடு முழுவதும் கரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 1,64,110-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,15,69,241 போ் குணமடைந்தனா். நாட்டில் தற்போது 6,58,909 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதையும் படிக்கலாமே.. பிரசாரம் ஓய்ந்தபின் என்னவெல்லாம் செய்யக் கூடாது? சத்யபிரத சாஹு அறிவுரை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் கடந்த 2-ஆம் தேதி வரை 24,69,59,192 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 10,46,605 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 7,30,54,295 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.