சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்; 30 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், 15 வீரர்களை காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்ட பிஜப்பூர் டர்டிரம் வனப்பகுதியில் நேற்று சனிக்கிழமை நக்சல்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர்.
நக்சல்களுடனான தாக்குதலில் 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் 2 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 30 வீரர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 23 பிஜப்பூர் மருத்துவமனையிலும், 7 பேர் ராய்ப்பூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நக்சல்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் 15 ராணுவ வீரர்களை காணவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.