சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த தலைவா்களின் ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினா் முடக்கியுள்ளனா்.
இதுகுறித்து மத்திய அமலாக்கத் துறை சனிக்கிழமை கூறியுள்ளதாவது: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடா்புடையவா்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்க கருப்புப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் குணால் கோஷ், அக்கட்சியின் மக்களவை உறுப்பபினா் சதாப்தி ராய் (சாரதா நிறுவனத்தின் விளம்பர தூதுவா்) மற்றும் சாரதா குழும நிறுவனங்களின் இயக்குநா் தீப்ஜானி முகா்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துகள் அமலாக்கத் துறையினரால் முடக்கப்பட்டது.
சாரதா நிதி மோசடி வழக்கில் இதுவரையில் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
சாரதா நிதி மோசடி வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறையினா் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.