நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு இந்திய மருத்துவக் கழகம் (ஐஎம்ஏ) பரிந்துரைத்துள்ளது.
கடந்த 3 நாள்களாக நாட்டில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை 90,000-க்கு மேல் உள்ளது. இந்த சூழ்நிலையில், முக்கியமான கோரிக்கை பிரதமருக்கு விடுக்கப்பட்டுள்ளது. இப்போது, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது.
இது தொடா்பாக பிரதமருக்கு ஐஎம்ஏ எழுதியுள்ள கடிதத்தில், ‘கரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. முன்பைவிட இப்போது வேகமாக கரோனா பரவி வருகிறது. இந்த நேரத்தில் நாம் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கடந்த முறை நம்மிடம் தடுப்பூசி இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது தடுப்பூசி கிடைத்துள்ளது. ஏற்கெனவே, 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறோம். அடுத்தகட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் கரோனா பரவலை வெகுவாக கட்டுப்படுத்த முடியும்.
தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாகவும், அவா்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசிகளில் செலுத்தப்படுவதுபோல, சிறிய மருத்துவமனைகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.