கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருவதையடுத்து, மத்தியப் பிரதேச அரசு சத்தீஸ்கருடனான பேருந்துப் போக்குவரத்தை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பான உத்தரவை மத்தியப் பிரதேச போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக சத்தீஸ்கருடனான பேருந்துப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளதாக மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை வெளியிடப்பட்ட போக்குவரத்துத் துறையின் உத்தரவின்படி, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் இடையே பயணிகள் பேருந்து இயக்கம் ஏப்ரல் 7 முதல் 15 வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
தொற்று பரவல் அதிகரித்ததையடுத்து, மகாராஷ்டிரத்தின் எல்லையில் உள்ள மாநிலப் பகுதிகளை மத்தியப் பிரதேச அரசு ஏற்கெனவே சீல் வைத்துள்ளது,
இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒருநாள் பாதிப்பு 9,921 ஆகப் பதிவாகியுள்ளது. இது கடந்தாண்டு தொற்றை விட அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3,68,269 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 4,416 ஆக உயர்ந்துள்ளது. செவ்வாயன்று மேலும் 53 பேர் இந்த நோய்க்கு பலியாகியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 3,722 பாதிப்பும், 18 இறப்புகளும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.