அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரில் ஏப்ரல் 19ஆம் தேதி வரை பகுதிநேர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பைக் கருத்தில் கொண்டு ராய்ப்பூர் மாவட்டத்தில் ஏப்ரல் 9 முதல் 19ஆம் தேதி வரை பொதுமுடக்கம் விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் இந்த பொதுமுடக்கத்தின்போது மாவட்டத்தின் எல்லைகள் மூடப்பட உள்ளதாகவும், மக்கள் பொதுஇடங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளுக்கு இந்தப் பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் மற்றும் துர்க் மாவட்டங்கள் அதிகப்படியான கரோனா தொற்று பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இவ்விரு மாவட்டங்களிலும் முறையே 2821 மற்றும் 1838 புதிய கரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.