மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச பாஜக தலைவர் பிரியம்வாட தோமர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததையடுத்து பல்வேறு மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில் கடந்த 140 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவரான பிரியம்வாட தோமர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
பாஜக தலைவர் சுவாதந்திர தேவ் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் அவர், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில், “விவசாயிகள் மீதான அரசாங்கத்தின் பிடிவாதம், புறக்கணிப்பு மற்றும் உணர்வற்ற தன்மை ஆகியவற்றால் நான் மிகவும் வேதனை அடைகிறேன். எனவே எனது மனசாட்சியின்படி மாநில நிர்வாக உறுப்பினர், முதன்மை உறுப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் பாஜக விவசாயிகளுக்கு விரோதமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியுள்ள அவர் பெண்கள் நலனை பாஜக அரசு புறக்கணித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.