நாடு முழுவதுமான பொதுமுடக்கத்தை அறிவித்தாலும் போராட்டத்தைக் கைவிட்டு கலையப் போவதில்லை என தில்லியில் போராடி வரும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச பாதிப்பாகும். அதே நேரத்தில் 630 போ் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில் புதன்கிழமை பேசிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான தில்லி விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை மற்றொரு ஷாகின் பாக் போராட்ட முடிவாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.
மேலும் நாடு முழுவதும் கரோனா தொற்றால் ஊரடங்கு விதிக்கப்பட்டாலும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி விவசாயிகளின் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.
கடந்த 140 நாள்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.