புது தில்லி: அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி, கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளாா்.
கடந்த 3 நாள்களில் கரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை இரண்டு முறை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த நிலையில், உலக சுகாதார தினத்தையொட்டி, பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
இந்த பூமியில் வாழும் மக்களை நலமுடன் வைத்திருக்க இரவுபகலாக அயராது பாடுபட்டு வரும் அனைவருக்கும் உலக சுகாதார தினத்தில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சுகாதாரத் துறையில் புதுமை கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தும் நாள் இது.
இந்த நாளில், நாம் அனைவரும் முகக் கவசம் அணிவது, கை களை அடிக்கடி கழுவுவது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நவடிக்கைகளையும் பின்பற்றி கரோனாவுக்கு எதிராக போராட்டத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதிசெய்வதற்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மக்கள் மருந்தகம் தொடக்கம் என பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளாா்.