இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது சீனா: முப்படைத் தளபதி விபின் ராவத்

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவுக்கு உள்ளது என்று முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவுக்கு உள்ளது என்று முப்படைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தார். 
இதுதொடர்பாக தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது: 
இந்தியா, சீனா இடையே இணையவழி துறையில் மிகப் பெரிய வித்தியாசம் நிலவுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் மீது அதிக நிதியை சீனாவால் முதலீடு செய்ய முடிகிறது. 
தொழில்நுட்பத்தில் இந்தியாவை சீனா முந்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்பத்தில் திறன் சார்ந்த இடைவெளி நிலவுகிறது. 
இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவுக்கு உள்ளது. அவ்வாறு இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். 
இணையவழி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இணையவழி தாக்குதல் பிரச்னை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்தத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான தடுப்பு அரண்களை உருவாக்குவதே நோக்கமாக உள்ளது. 
புதிய தொழில்நுட்பங்களை ஈடுபடுத்துவதில் ராணுவம், விமானப் படையுடன் ஒப்பிடுகையில் கடற்படை முன்னிலை வகிக்கிறது. 
பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அச்சுறுத்தல்களையும் சவால்களையும் இந்தியா எதிர்கொண்டுள்ளது. நட்பு நாடுகள் பாதிக்கப்படாத வகையில் அந்த சவால்களைத் திறம்பட சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் நிலவும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்வதற்கான சிறந்த தலைமைப்பண்பை இந்திய அரசு வெளிப்படுத்தி வருகிறது.
பாதுகாப்பு தொடர்பாக எழும் பிரச்னைகளுக்கான தீர்வுக்கு மேற்கத்திய நாடுகளைச் சார்ந்திருப்பதை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும். அந்த விவகாரங்களை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாக மற்ற நாடுகள் இந்தியாவிடம் இருந்து பாடம் கற்கும் அளவுக்கு சர்வதேச அளவில் தலைமை பெற வேண்டும். 
முப்படைகள் இடையே ஒருங்கிணைப்பு: இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று கூறி ராணுவம், விமானம் மற்றும் கடற்படை தலைமை தளபதிகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். எதிர்காலத்தில் ஏற்படும் பாதுகாப்பு சவால்களை நாடு எதிர்கொள்வதற்கு முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு அவசியம் என்றார் விபின் ராவத்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com