ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓரிரு நாள்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி இருப்பு உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தா தெரிவித்தார்.
தற்போது வரை 18,27,800 தடுப்பூசிகள் முதல் டோஸாகவும் 2,78,000 தடுப்பூசிகள் இரண்டாம் டோஸாகவும் போடப்பட்டுள்ளது. மேலும் 83 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி தேவைப்படுகிறது. அதன்படி, குறைந்தது 1.60 கோடி டோஸ்கள் தேவைப்படுகின்றன. எனினும் முதற்கட்டமாக 10 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். பல இடங்களில் கரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன்.
ஓரிரு நாள்களுக்கே தடுப்பூசி உள்ள நிலையில் மத்திய அரசு விரைந்து கரோனா தடுப்பூசிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கரோனாவுக்கு எதிராக போராடும் இந்த நேரத்தில் தடுப்பூசி தட்டுப்பாட்டினால் பாதிப்பு ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
அதேபோன்று மகாராஷ்டிரத்திலும் கரோனா தடுப்பூசி இருப்பு குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்தார்.
முன்னதாக ஒடிசா மாநிலத்தில் இரு தினங்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி இருப்பு உள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.