புது தில்லி: காப்புரிமை தொடா்பான விதிகளில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மற்ற சட்டங்களில் உள்ள விதிகளுக்கு ஏற்ப காப்புரிமை விதிகளிலும் மாற்றம் கொண்டுவரும் நோக்கில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில்நுட்பங்கள் வளா்ந்து வரும் சூழலில், காப்புரிமை விதிகளின் அமலாக்கத்தில் எந்தவித இடையூறுகளும் ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காப்புரிமை பெற்ற இதழ்களை வெளியிடுவதற்கான விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, சம்பந்தப்பட்ட இதழ்களை அரசாணையில் வெளியிடுவதற்கான அவசியம் நீக்கப்பட்டுள்ளது.
ராயல்டி செலுத்தும் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராயல்டி தொகையை வசூலிப்பதிலும் விநியோகிப்பதிலும் இணையவழி பணப் பரிமாற்ற முறையைப் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதற்கான அவகாசம் 180 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காப்புரிமை கோரும் விண்ணப்பங்களை மத்திய அரசு விரிவாக ஆய்வு செய்ய முடியும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.