கோவாவின் வளர்ச்சிக்கான மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் கனவை ஆம் ஆத்மி நிறைவேற்றும் என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பனாஜியில் உள்ள ஆம் ஆத்மி நிர்வாகிகளிடம் காணொலி வாயிலாக சிசோடியா கூறியது:
"கோவாவின் வளர்ச்சிக்கான மறைந்த பாரிக்கரின் கனவை தற்போதைய அரசு குழி தோண்டி புதைத்துவிட்டது. பாரிக்கருடன் இணைந்து பணியாற்றிய பாஜக நிர்வாகிகள் அனைவரும் எங்களுடன் இணையுங்கள். அவரது கனவை நாங்கள் நிறைவேற்றுவோம். பாரிக்கரின் கனவை நிறைவேற்றும் சக்தி எங்களிடம் உள்ளது.
ஊழல் அரசியலால் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சி காங்கிரஸ் மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இதற்கான மாற்றாக ஆத் ஆத்மியையே மக்கள் விரும்புகின்றனர்.
கோவாவில் தேர்தல் முடிவுகள் எப்படி வந்தாலும், பாஜகவே ஆட்சியமைக்கிறது. எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வருகிறது. அதே பணத்தை நேர்மையாக பயன்படுத்தியிருந்தால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம். மானிய விலையில் மின் விநியோகத்தை சாத்தியப்படுத்தியிருக்கலாம்."
கோவாவில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.