பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சரோஜ் பாண்டேவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் சரோஜ் பாண்டே சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர்,“கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.