நாட்டில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
"நாள்தோறும் பதிவாகும் கரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருந்தபோதிலும் இதற்கு முன்பு ஒரேநாளில் 1,114 பேர் பலியானதே உச்சமாக உள்ளது. தற்போது ஒரேநாளில் 879 பேர் பலியாகியிருப்பது பதிவாகியுள்ளது.
நாட்டில் 89.51 சதவிகிதம் பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டனர். 1.25 சதவிகிதம் பேர் பலியாகிவிட்டனர். 9.24 சதவிகிதம் பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிதாக பாதிப்புக்குள்ளாவர்களைப் பார்த்தால் தினசரி கரோனா பாதிப்பில் பழைய உச்சத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுவிட்டோம். அது மேலும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இது கவலையளிக்கிறது.
சத்தீஸ்கரில் ஒரு வாரத்துக்கு 1.5 சதவிகிதமாக இருந்த தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம், தற்போது 27.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. எனவே இது மற்றொரு கவலையளிக்கக்கூடிய விஷயம்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 10.85 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 40 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
தரவுகளின்படி காலை 11 மணி நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 1,67,20,000 பயன்படுத்தப்படாத தடுப்பூசிகள் கைவசம் உள்ளன. இந்த மாதம், ஏப்ரல் இறுதிவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களுக்கு 2,01,22,960 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
சரியாக திட்டமிடப்பட்டு வருவதையும், தடுப்பூசிகள் தட்டுப்பாட்டில் இல்லை என்பதையுமே இது தெளிவாகக் காண்பிக்கிறது."