கேரளத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறி மேலும் 50 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களும் கரோனா தடுப்பூசி இருப்பில் தட்டுப்பாடு நிலவி வருவதாக மத்திய அரசிடம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் கேரளத்திற்கு கூடுதலாக 50 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கக்கோரி அம்மாநில முதல்வர் மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கேரளத்தில் தற்போது 3 நாள்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேரளத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட 56,84,360 தடுப்பூசிகளில் 48,24,505 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 50 லட்சம் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கவேண்டும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.