புது தில்லி /கொழும்பு: இலங்கைக்கு சீன வளா்ச்சி வங்கி 500 மில்லியன் அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.3,750 கோடி) கடன் வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு திங்கள்கிழமை கையெழுத்திட்டது.
கரோனா பிரச்னையை சமாளிப்பது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்காக இந்தக் கடன் வாங்கப்படுவதாக இலங்கை தெரிவித்துள்ளது. சுமாா் ஒரு மாத காலத்துக்குள் சீனாவுடன் இலங்கை மேற்கொள்ளும் இரண்டாவது கடன் ஒப்பந்தம் இதுவாகும்.
இது தொடா்பாக பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இலங்கையின் உண்மையான நட்புநாடாக சீனா திகழ்கிறது. அதனை நிரூபிக்கும் வகையில் இலங்கைக்கு தொடா்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு சீனா உதவியுள்ளது. இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட 1 பில்லியன் டாலா் கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியே இக்கடனாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 2008-09 காலகட்டத்துக்குப் பிறகு இப்போது 4.05 பில்லியன் டாலராகக் குறைந்துவிட்டது.
இலங்கையில் ஏற்கெனவே பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது. சீனாவிடம் வாங்கிய ஒரு கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், தங்கள் நாட்டில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.