மகாராஷ்டிர மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவையொட்டி சொந்த ஊர் செல்ல வெளிமாநில தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் குவிந்துள்ளனர்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் பகுதிநேரப் பொதுமுடக்கத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை 144 தடை உத்தரவு பிறப்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் உத்தரவு காரணமாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் நிலையங்களில் காத்திருந்து வருகின்றனர். வேலை மற்றும் வருமானமின்றி மீண்டும் ஊரடங்கில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதாகக் கருதும் அவர்கள் தங்களது உடைமைகளுடன் போக்குவரத்து வசதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மும்பையில் உள்ள ரயில் நிலையத்தில் கடந்த 2 நாள்களாக வெளிமாநில தொழிலாளர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
கடந்த வருடம் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் வருமானமின்றி தவித்த தொழிலாளர்கள் பலர் நடந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.