மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து, பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சம் கொள்ளத் தேவையில்லை என ரயில் நிலையங்களில் குவியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
144 தடை உத்தரவு உள்பல பல்வேறு கட்டுப்பாடுகள் பிறக்கப்பட்டிருப்பதால், விரைவில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில், மகாராஷ்டிர மாநிலம் லோகமானிய திலகர் ரயில் நிலையத்தில் நெடுந்தொலைவு செல்லும் ரயில்களில் ஏற ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் காத்திருந்தனர்.
இந்த நிலையில், மத்திய ரயில்வே வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக குவிய வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காமல் காணப்படும் மக்கள் கூட்டத்தை நெறிப்படுத்த மத்திய ரயில்வே காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாரத்தின் துவக்கம் முதலே மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் முக்கிய ரயில் நிலையங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளுடன் சொந்த ஊர்களுக்கு ரயிலேற கூட்டம் கூட்டமாக வந்தடைந்த வண்ணம் உள்ளனர்.