ஊரடங்கு அச்சத்தால் தில்லியில் தங்கி பணிபுரிந்துவரும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
ஏராளமான தொழிலாளர்கள் பேருந்து நிலையங்களில் குவிந்ததால், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல் போனது.
நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. தில்லியில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மருத்துவமனைகளில் தொற்றால் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் அச்சத்தால், தில்லியில் தங்கி பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
தில்லி ஆனந்த விஹார் பேருந்து நிலையத்தில் அதிக அளவிலான மக்கள் குவிந்தனர்.
இது தொடர்பாக பேசிய வெளிமாநிலத் தொழிலாளி ஒருவர், தில்லியில் விரைவில் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம். அதனால் நாங்கள் எங்கள் இல்லங்களுக்குச் செல்கிறோம். கரோனா அதிகரிப்பதால் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்று அனைவரும் கூறுகின்றனர். அதனால் உத்தரப் பிரதேசத்திற்கு செல்கிறோம் என்று கூறினார்.