அம்பேத்கரை சொந்த நலன்களுக்காக மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருவதாகவும், பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே அவரின் கனவுகளை நிறைவேற்ற பாடுபடுவதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்து செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி நீண்டகாலமாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு பாரதரத்னா விருது வழங்காமல் துரோகம் இழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் வலுவான முயற்சியால் தான் 1990ஆம் ஆண்டு அவருக்கு பாரத ரத்னா வழங்கி கெளரவிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் மக்களைத் தூண்டுவதற்கும் அவர்களின் சொந்த நலன்களுக்காக தங்கள் விருப்பப்படி வரலாற்றை மாற்றி எழுதியுள்ளதாகத் தெரிவித்த அவர் பகுஜன் சமாஜ் கட்சி மட்டுமே அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றப் பாடுபடுவதாக தெரிவித்தார்.