ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 320 டோஸ் கரோனா தடுப்பூசி மருந்துகள் திருடப்பட்டன.
இதுகுறித்து ஜெய்ப்பூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி நரோத்தம் மிஸ்ரா புதன்கிழமை கூறுகையில், "சாஸ்திரி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கோவேக்ஸின் மருந்தின் 320 டோஸ்கள் திருடப்பட்டதாக அந்த மருத்துவமனை அதிகாரிகள் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக துறைவாரியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.
"கோவேக்ஸின் மருந்தின் 32 குப்பிகள் திருடப்பட்டுள்ளன. ஒரு குப்பியில் 10 ஊசிகளுக்கான மருந்துகள் இருக்கும். அந்த வகையில் கோவேக்ஸின் மருந்தின் 320 டோஸ்கள் திருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று சாஸ்திரி நகர் காவல்நிலைய அதிகாரி தெரிவித்தார்.