மும்பை: மகாராஷ்டிரத்தில் 15 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக மும்பை லோகமானிய திலகர் ரயில் நிலையத்தில் கூடினர்.
இதையடுத்து, மக்கள் பீதியடைந்து அவசரமாக வெளியேற வேண்டாம் என்று ரயில்வே நிர்வாக் கேட்டுக் கொண்டுள்ளது. எனினும், பெரும்பாலான வெளிமாநிலத் தொழிலாளர்கள் மகாராஷ்டிரத்தைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. இதில் கரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்தது. இதையடுத்து, 15 நாள் ஊரடங்கை முதல்வர் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார்.
இதில், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே ரயில், பேருந்து இயக்கப்படும் என்று கூறப்பட்டது.
நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில்தான் அதுவும் மும்பை நகரில்தான் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, வேலையிழப்பு, உணவுப் பிரச்னை உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஆர்வம் காட்டி வருகின்றனர்.