புது தில்லி: நாடு இரண்டாவது கரோனா அலையை எதிர்கொண்டு வரும் நிலையில், தலைநகர் தில்லியோ அதன் நான்காவது அலையை கடும் இன்னல்களுக்கு மத்தியில் எதிர்கொண்டு வருகிறது.
தில்லியில் புதன்கிழமை ஒரே நாளில் 17 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாட்டிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் வணிக நகரமான மும்பையை பின்னுக்குத் தள்ளி, தலைநகர் புது தில்லி முதலிடத்தில் முட்டி மோதிக் கொண்டுள்ளது.
மும்பையில் அதிகபட்சமாக ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதே இதுவரை உச்சபட்சமாக உள்ளது. அதே நாளில் புணேவில் 12 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதியானது.
நேற்று பெங்களூருவில் 8,155 பேருக்கும், சென்னையில் 2,564 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் தில்லியில் நேற்று ஒரே நாளில் 17 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 பேர் பலியாகியுள்ளனர். இதனால், ஒருநாள் பாதிப்பில் முதல் இடத்தில் இருந்த மும்பையை மிகப்பெரிய எண்ணிக்கை வித்தியாசத்தில் இன்று புது தில்லி பின்னுக்குத் தள்ளியுள்ளது.
திடீரென கரோனா நோயாளிகள் அதிகரித்ததால், மருத்துவமனைகளில் கடுமையான கூட்டம் அலைமோதுகிறது. வயது வித்தியாசமின்றி, தடுப்பூசி போட்டவர்கள் போடாதவர்கள் என்ற பேதமின்றி அனைவருக்கும் கரோனா பரவி வருகிறது. தில்லியின் தற்போதைய நிலைமை மிக மோசமாக இருப்பதாக தனியார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.