தனக்கு கீழ் பணிபுரியும் வழக்கறிஞர்கள் உள்பட ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் கடினமான நேரம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி எம்.ஆர்.ஷா காணொலி வாயிலாக ஒரு வழக்கின் விசாரணையில் இருந்தபோது அவருக்கு இந்தத் தகவல் வந்துள்ளது.
தன்னுடைய ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போதே தெரிவித்தார். மேலும் இது மிகவும் மோசமான சூழ்நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து வழக்கின் விசாரணை 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 2 மணிக்கு மீண்டும் தொடங்கியது.
உச்ச நீதிமன்றத்தில் ஊழியர்கள் பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்போது வழக்கின் விசாரணை முழுவதுமாக காணொலி வாயிலாக மட்டுமே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தில் 3.400 ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி 40க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.