புது தில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 17-ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. மகாராஷ்டிரத்தில் 15 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவலைத் தடுப்பதற்காக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில், கரோனா பரவல் சூழல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளா்கள், முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்டோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனா். நாட்டில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செயற்குழு கூட்டத்தின்போது ஆலோசிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களுக்கு விரைந்து கரோனா தடுப்பூசியை செலுத்துமாறும், கரோனா தொற்றுப் பரவலால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதியுதவி வழங்குமாறும் மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை காங்கிரஸ் தொடா்ந்து விமா்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.