மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டமும் மக்களை சென்றடையாத வண்ணம் ஒரு சுவரைப் போல தடையாக இருக்கிறார் மம்தா பானர்ஜி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் அஸன்சோலில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முத்தலாக் முறையை ஒழிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. விவசாயிகளைக் காக்க சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. அம்பான் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது மத்திய அரசு. ஆனால் மத்திய அரசு கொண்டு வரும் எந்த நலத்திட்டங்களும் மக்களைச் சென்றடையாமல் ஒரு சுவரைப் போல மம்தா பானர்ஜி தடுத்து வந்தார்.
மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு எதிராக ஒரு சுவரைப் போல தடுத்து வந்தார். புலம்பெயர்ந்தவர்களுக்காக மத்திய அரசு உதவி செய்ய முன்வந்தது. ஆனால் அதனைக் கூட மம்தா எதிர்த்தார் என்று மோடி கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசு நடத்தும் எந்த கூட்டத்திலும் மேற்கு வங்கம் சார்பில் மம்தா பானர்ஜி பங்கேற்பதில்லை. நீதி ஆயோக் கூட்டம், கரோனா பரவலைத் தடுப்பது குறித்த கூட்டங்களிலும் கூட அவர் பங்கேற்கவில்லை என்று மோடி குற்றம்சாட்டினார்.