போபால்: ஏதோ மரணத்துக்கு பஞ்சம் ஏற்பட்டது போல, கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 58 வயது நபர், இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் இரண்டு முறை அறிவித்துள்ளது. ஆனால் அவர் இப்போது உயிரோடுதான் இருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 12-ஆம் தேதி கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார் கோரேலால் கோரி. அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாயன்று, மருத்துவமனை நிர்வாகத்தினர், தனது தந்தை இறந்துவிட்டதாகக் கூறினார். ஆனால் பிறகு அவர் உயிரோடு இருப்பதாகக் கூறினார்கள் என்கிறார் அவரது மகன் கைலாஷ் கோரி.
பிறகு, அன்று மாலையில், மருத்துவமனையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், தனது தந்தை கவலைக்கிடமாக இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். பிறகு இரவு 8.30 மணியளவில், அறுவை சிகிச்சை செய்யும் போதே அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். அதே வேளையில், அவர் கரோனா நோயாளி என்பதால் உடலை ஒப்படைக்க முடியாது என்றும் இடுகாட்டுக்கு வெள்ளிக்கிழமை காலையில் வரும்படியும் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை காலை நாங்கள் இடுகாட்டுக்குச் சென்ற பாது அங்கே வேறு ஒரு குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள், எனது தந்தை உயிரோடு இருப்பதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவக் கல்லூரி டீன் மருத்துவர் சுனில் நந்தேஷ்வர் கூறுகையில், நோயாளி வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை பெற்று வந்தார். திடீரென அவரது இதயத் துடிப்பு நின்றுவிட்டது. உடனடியாக பணியில் இருந்த செவிலியர் அவரது குடும்பத்தாருக்குத் தெரிவித்துவிட்டார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் உடனடியாக முதலுதவி செய்து அவரது உயிரை மீட்டனர். அவர் தற்போதும் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சையில் உள்ளார் என்று விளக்கம் அளித்தார்.