கரோனா முதல் அலையைப் போல அல்லாமல், பெரியவர்கள் மூலமாக வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கும் கரோனா உறுதி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
கரோனா அதிகம் பாதித்திருக்கும் நகரங்களில், குழந்தைகள் பிரிவிலும் குறிப்பிடத்தக்க அளவில் கரோனா பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
கரோனா முதல் அலையில், வயதானவர்களையே அதிகம் தாக்கிய கரோனா தொற்று, இம்முறை எந்த பேதமுமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. கொடூரமாகத் தாக்கி வருகிறது. முதல் அலையின்போது கரோனா பாதித்த குழந்தைகளுக்கு பெரிய அளவில் எந்த அறிகுறியும் ஏற்படவில்லை. ஆனால், இம்முறை குழந்தைகளுக்கும் மிக மோசமான அறிகுறிகளும், உடல் நலப் பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக புணேவில் ஏராளமான குழந்தைகள் கரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில்லாமல் சில குழந்தைகளுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதையும் காண முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா உறுதி செய்யப்படும் குழந்தைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்படுவதாகவும், சிலர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவது அவசியமாவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.