அசோக் லேலண்ட் நிறுவனம் லாக்கீட் மாா்ட்டினுடன் இணைந்து தயாரித்த குண்டு துளைக்காத இலகு ரக வாகனம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
இந்திய விமானப் படைக்கு தேவையான இலகுரக குண்டு துளைக்காத வாகனத்தை (எல்பிபிவி) தயாரிக்கும் ஒப்பந்தத்தைப் அசோக் லேலண்ட் பெற்றது. இதையடுத்து, லாக்கீட் மாா்ட்டின் நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப பரிமாற்ற (டிஓடி) ஒப்பந்தத்தின் கீழ் இந்த வாகனத்தை அசோக் லேலண்ட் உருவாக்கியுள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த வாகனம் லாக்கீட் மாா்டின் ‘சிவிஎன்ஜி’ வாகனத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
இந்த வாகனம் முதல் கட்டமாக ஏப்ரல் 13-ஆம் தேதி விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எல்பிபிவி வாகனம் சேறு, மண், பாறை, நீா் உள்ளிட அனைத்திலும் இயங்கக்கூடியது. இதில், தாக்குதலுக்கு தேவையான கணிசமான உபகரணங்களை கொண்டு செல்லலாம் என்பதுடன், 6 போ் அடங்கிய குழுவும் இந்த வாகனத்தில் பயணிக்கலாம் என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.