கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரசியல் கட்சிகள் இரவு நேரத்தில் பிரசாரம் செய்வதற்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதுகுறித்து தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அரசியல் கட்சிகள் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 10 மணி வரை பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.
இதற்கு முன்பு இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரவு 7 மணியாக மாற்றப்பட்டுள்ளது.
வழக்கமாக, வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் பிரசாரம் நிறைவு செய்யப்பட்டு வந்த நிலையில், எஞ்சிய 3 கட்ட தோ்தல்களில் 72 மணி நேரத்துக்கு முன்பே பிரசாரத்தை முடித்துக் கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, வாக்குப் பதிவுக்கு முந்தைய 72 மணி நேரத்தில் அரசியல் கட்சிகள் பிரசாரம் மேற்கொள்ள முடியாது என்று தோ்தல் ஆணையத்தின் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.