சத்தீஸ்கரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கரோனா நோயாளிகள் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 34 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 9 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் அனைத்து பகுதிகளுக்கும் தீ வேகமாகப் பரவிய நிலையில் நோயாளிகள் பலரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த மீட்புக்குழுவினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே தீ விபத்தில் சிக்கிய நோயாளிகளையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதில், 29 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 5 கரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தோருக்கு சத்தீஸ்கர் மாநில அரசு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.