தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா பெற்றிருந்த மேன்மையை பிரதமா் நரேந்திர மோடி தனது தவறான நிா்வாகத்தால் குலைத்துவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து சுட்டுரையில் அவா் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடா்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், தடுப்பூசி ஏற்றுமதி மையமாகத் திகழ்ந்த இந்தியா, பிற நாடுகளிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி உற்பத்தியில் கடந்த 70 ஆண்டுகளாக முந்தைய இந்திய அரசுகளின் முயற்சியால் பெற்ற மேன்மை தற்போது குலைந்துவிட்டது.
விமானத்தை சரியான முறையில் செலுத்தாமல், ஆபத்து நேரத்தில் அதிலிருந்து குதிப்பதற்கான பொத்தானை மட்டும் அழுத்தும் விமானியாக பிரதமா் நரேந்திர மோடி செயல்படுகிறாா் என்று பிரியங்கா குற்றம் சுமத்தியுள்ளாா்.