கரோனா தொற்றின் மையப்பகுதியாக பெங்களூரு மாறியுள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் தெரிவித்துள்ளார்.
இதனால், கரோனாவுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கர்நாடகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஆளுநர் வஜூபாய் வாலா சார்பில், அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
முதல்வர் எடியூரப்பா மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆளுநர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் சுதாகர் பேசியதாவது, ''கர்நாடகத்தில் கரோனாவின் மையமாக பெங்களூரு மாறியுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள மொத்த பாதிப்பில் 70 சதவிகிதத்தினர் பெங்களூருவில் மட்டுமே உள்ளனர். இதனால் பெங்களூரு உள்பட 7 மாவட்டங்களில் கரோனா பரவலைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
தொற்று அதிகமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பரிந்துரைகளை அரசு மதிப்புடன் ஏற்று அதற்கேற்ப செயல்பாடுகளை துரிதப்படுத்துகிறது.
கரோனாவுக்கு எதிராக போரிட அரசு தயாராகவுள்ளது. அதிக அளவிலான மக்களுக்கு கரோனா உறுதி செய்யப்படுவதால், அனைவருக்கும் ஐசியூ படுக்கைகள் வழங்க இயலவில்லை.
நம் நாட்டில் மட்டுமல்ல. உலகம் முழுவதுமுள்ள முன்னேறிய நாடுகளும் கரோனா படுக்கைகளுக்கு தட்டுப்பாடை சந்தித்து வருகின்றன'' என்று கூறினார்.