கரோனா வைரஸ் தொற்று கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை லெப்டினன்ட் கவர்னர் அலுவலகம் சுட்டுரை பதிவில் அறிவித்தது..
ஜம்மு-காஷ்மீரில் உள்ள 20 மாவட்டங்களின் நகராட்சி மற்றும் உள்ளூர் நகர்ப்புறங்களிலும் இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எட்டு மாவட்டங்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. தற்போது இந்த இரவு முடக்கத்தை மேலும் நீட்டித்துள்ளது.
மேலும், பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சந்தைகள், பஜார், மால்களில் 50 சதவீத கடைகள் மட்டும் சுழற்சி முறையில் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டுரையில் தெரிவித்தார்.