கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டாலும் தொற்று பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் நோய்த் தொற்று ஏற்படுமா என்பது பற்றி விளக்கமளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசு அளித்த தரவுகளின் விவரம்:
"நாட்டில் இதுவரை மொத்தம் 1.1 கோடி பேருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 93,56,436 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 17,37,178 பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 4,208 (0.04 சதவிகிதம்) பேருக்கு மட்டுமே மீண்டும் நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இரண்டாவது தவணை போட்டுக்கொண்டவர்களில் 695 பேருக்கு (0.04 சதவிகிதம்) மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதேபோல் கோவிஷீல்ட் தடுப்பூசி இதுவரை மொத்தம் 11.6 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 10,03,02,745 பேர் முதல் தவணை தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொண்டுள்ளனர். 1,57,32,754 பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
முதல் தவணை மட்டும் போட்டுக்கொண்டவர்களில் 17,145 பேருக்கு (0.02 சதவிகிதம்) மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இரண்டு தவணையும் போட்டுக்கொண்டவர்களில் 5,014 பேருக்கு (0.03 சதவிகிதம்) மட்டுமே நோய்த் தொற்று உறுதியாகிறது."
கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி குறித்து ஏராளமான வதந்திகள் பரவி வரும் நிலையில் மத்திய சுகாதாரத் துறையின் புள்ளி விவரம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.