தொழில் துறை பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்துமாறு மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவது குறித்து மேக்ஸ் மருத்துவமனை தில்லி உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கைத் தொடர்ந்தது. அதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் 9.20 மணிக்கு வழக்கை விசாரித்தது.
வழக்கு விசாரனையின்போது நீதிமன்றம் தெரிவித்தது:
"அரசு ஏன் நிதர்சனத்தை உணரவில்லை? மக்கள் இறப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது மிகக் கடுமையான அவசரநிலை.
ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு தொழில் நிறுவனங்கள் சில நாள்கள் காத்திருக்கலாம். எஃகு ஆலை மற்றும் பெட்ரோலிய ஆலைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தியை மத்திய அரசு உடனடியாகக் கையிலெடுத்து, அதை மருத்துவப் பயன்பாட்டுக்கு விநியோகிக்க வேண்டும்."
மத்திய அரசிடமிருந்தோ, மாநில அரசிடமிருந்தோ ஆக்ஸிஜன் வழங்குவதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை என்று மேக்ஸ் மருத்துவமனை தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.